tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday 28 June 2010

குழந்தைகளுக்கு கதை

முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக‌ காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக் செய்தால் கொஞ்சும் மொழியில் அழகாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.எல்லாம் குழந்தைகளூக்காக குழந்தைகளே சொல்லும் கதைகள்.

குழந்தைகளுக்கான தரமான,பாதுகாப்பான தளங்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தாராள‌மாக இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த‌ த‌ள‌த்தை உருவாக்கியிருப்ப‌தும் ஒரு பெற்றோரே.அந்த வகையில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் அமைத்த தளம் என்றும் சொல்லலாம்.
ல‌ண்ட‌னை சேர்ந்த‌ லிசா ஸ்வ‌ர்லிங் ம‌ற்றும் ரால்ப் லேச‌ர் த‌ம்ப‌தி இந்த தள‌த்தை உருவாக்கியுள்ள‌வ‌ர்க‌ள்.இருவ‌ரும் எழுத்திலும் வ‌ரைக‌லையிலும் ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாம்.இணைய‌த‌ள‌ வ‌டிவ‌மைப்பிலும் திற‌ன் மிக்க‌வ‌ர்க‌ள்.
க‌ட‌ந்த‌ பிப்ர‌வ‌ரி மாத‌ம் இவ‌ர்க‌ள் ஆப்பிரிக்காவில் உள்ள‌ க‌ல‌காரி பாலைவ‌ன‌ப்ப‌குதியில் சுற்றுலா சென்றூள்ள‌ன‌ர்.அப்போது போஸ்ட்வானாவில் இருந்து தென்னாப்பிரிக்காவின் கேப்ட‌வுனுக்கு சென்று கொண்டிருந்த‌ன‌ர்.நீண்ட‌ நெடிய‌ ப‌ய‌ண‌ம் தான்.
லிசா த‌ம்ப‌தியின‌ர் பாலைவ‌ன‌த்தின் அழ‌கை ர‌சித்த‌ப‌டி ப‌ய‌ண‌த்தில் ல‌யித்திருந்த‌ன‌ர்.ஆனால் அவ‌ர்க‌ளின் ம‌க‌ள்க‌ளுக்கு இந்த‌ ப‌ய‌ண‌ம் கொஞ்ச‌ம் போர‌டிக்க‌வே செய்த்திருக்கிற‌து.இது இய‌ல்பு தானே.
அப்போது எட்டு வ‌ய‌தான‌ மூத்த பெண் ஆறு வ‌ய‌தான‌ த‌ன‌தும் த‌ங்கைக்கு க‌தை சொல்ல‌ ஆர‌ம்பித்திருக்கிறார்.யூடியூப் த‌லைமுறை அல்ல‌வா?அத‌னால் பெரிய‌வ‌ள் நேராக‌ க‌தை சொல்லாம‌ல் கையில் இருந்த‌ ஐபோன் வ‌ழியே க‌தை சொல்லிருக்கிறாள்.அத‌வ‌து க‌தை புத்த‌க‌த்தை பார்த்து ப‌டித்த‌ப‌டி ஐபோன் காமிரா மூல‌ம் அத‌னை ப‌ட‌ம் பிடித்து பின்ன‌ர் தான் க‌தை சொல்லும் வீடியோ காட்சியை த‌ங்கைக்கு காண்பித்திருக்கிறாள்.
அதை பார்த்த‌ த‌ங்கை சொக்கிப்போய்விட்டாள்.அத‌ன் பிற‌கு ம‌ணிக்க‌க‌ண‌க்கில்
இருவ‌ரும் க‌தைசொல்லி க‌தை கேட்டு ம‌கிழ்ந்திருக்கின்ற‌ன‌ர்.  இர‌ண்டு சிறுமிக‌ளுக்கும்  நேர‌ம் போன‌தே தெரியாம‌ல் இந்த‌ பாலைவன‌ ப‌ய‌ண‌ம் இனிதாக‌ அமைந்த‌து.
இந்த‌ காட்சியை பார்த்துக்கொண்டிருந்த‌ லிசா த‌ம்ப‌தி பிள்ளைகள் இப்ப‌டி த‌ங்க‌ளுக்குள் ல‌யித்திருந்த‌தை நினைத்து ம‌கிழ்ச்சி அடைந்த‌ன‌ர்.பிள்ளைக‌ள் அவ‌ர்க‌ளை தொல்லை ப‌டுத்தாமல் இருந்த‌து ஒரு கார‌ண‌ம். அதோடு அக்கா த‌ங்கைக‌ள் இருவ‌ரும் த‌ங்க‌ளை ம‌ற‌ந்து க‌தையுல‌கில் ச‌ஞ்சார‌ம் செய்து ம‌கிழ்ந்த‌தும் லிசா த‌ம்ப‌திக்கு ம‌கிழ்ச்சியை அளித்த‌து.
பொதுவாக‌வே வீட்டில் இருக்கும் போது இருவ‌ரும் க‌தை புத்த‌க‌ங்க‌ளை ப‌டிப்ப‌திலும் க‌ம்ப்யூட்ட‌ர் முன் அம‌ர்ந்தால் யூடியூப்பில் வீடியோ பார்ப்ப‌திலும் மூழ்கி விடுவார்க‌ள்.
பிள்ளைக‌ளின் இந்த‌ ப‌ழ‌க்க‌த்தை அறிந்திருந்த‌ லிசாவுக்கு அவ‌ர்க‌ளின் முக‌த்தில் மின்னிய‌ ஆன‌ந்த‌தை க‌ண்ட‌தும் ஒரு அருமையான‌ யோச‌னை மின்னிய‌து.இதே போல‌ குழ‌ந்தைக‌ள் சொல்லும் க‌தைக‌ளை வீடியோ காட்சியாக்கி அவ‌ற்றை ஒரு இண்டெர்நெட் மூல‌ம் காண‌ச்செய்தால் எப்ப‌டி இருக்கும்?என்ப‌து தான் அந்த‌ எண்ண‌ம்.
அதாவ‌து எங்க‌ள் பிள்ளைக‌ள் பெற்ற‌ இன்ப‌ம் பெறுக‌ இவ்வைய‌க‌த்து குழ‌ந்தைக‌ள் என‌ நின‌த்தார்.
இப்ப‌டி பிற‌ந்த‌து தான் குழ‌ந்தைக‌ளூக்கான‌ க‌தை சொல்லும் ஸ்மோரிஸ் இணைய‌த‌ளம்.
குழ‌ந்தைக‌ளூக்காக‌ குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் க‌தைக‌ள் என்னும் வாச‌க‌த்தோடு இந்த‌ த‌ளத்தை உருவாக்கி அதில் குழ‌ந்தைக‌ள் வீடியோவில் சொல்லும் க‌தைக‌ளை இட‌ம்பெற‌ வைத்த‌ன‌ர்.க‌தை கேட்க‌ ஆர்வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் இந்த‌ வீடியோ க‌தைக‌ளை பார்த்து கேடு ர‌சிக்க‌லாம்.விருப்ப‌ப‌ட்டால் அவ‌ர்க‌ளும் த‌ங்க‌ள் ப‌ங்குக்கு க‌தை சொல்லி அந்த‌ விடியோவை ச‌ம‌ர்பிக்க‌லாம்.
ஆர‌ம்ப‌த்தில் க‌தைகளை ச‌ம‌ர்பிக்க‌ போட்டி ஒன்றை வைத்திருந்த‌ன‌ர். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் க‌தை சொல்ல‌லாம்.க‌தை சொல்ல‌ 16 வ‌ய‌து நிர‌ம்பியிருக்க‌ வேண்டும்.சொல்லும் க‌தை சின்ன‌தாக‌ 3 வ‌ய‌து முத‌ல் 8 வ‌ய‌து வ‌ரையிலான‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஏற்ற‌தாக‌ இருக்க‌ வேண்டும்.ஆங்கில‌த்தில் மட்டும் தான் க‌தை சொல்ல‌ வேண்டும்.க‌தைப்ப‌ட‌ல்க‌ளையும் ச‌ம‌ர்பிக்க‌லாம்.
ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌டும் க‌தைக‌ள் அழ‌காக‌ பிள்ளைக‌ளின் புக‌ப்ப‌ட‌ங்க‌ளோடு வ‌ரிசையாக‌ இட‌ம்பெறுகின்ற‌ன‌.அவற்றின் மீது கிளிக் செய்தால் முத‌லில் சிறு அறிமுக‌ குறிப்பு தோன்றுகிற‌து.தொட‌ர்ந்து கிளிக் செய்தால் க‌தை கேட்கலாம்.
நிச்ச‌ய‌மாக‌ குழ‌ந்தைக‌ள் சொல்லும் இந்த‌ க‌தைக‌ளை குழ‌ந்தைக‌ள் ர‌சித்து ம‌கிழ்வார்க‌ள்.
முக‌ப்பு ப‌க்க‌த்தில் சிரித்துகொண்டிருக்கும் ம‌ழ‌லைக‌ளின் முக‌த்தை பார்த்தாலே க‌தை கேட்கும் ஆவ‌ல் பிற‌க்கிற‌து.மாத‌ந்தோறும் 50 புதிய‌ க‌தைக‌ள் என்னும் வேக‌த்தில் இந்த‌ த‌ள‌ம் வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து.க‌தை சொல்ல‌வ‌த‌ற்கான‌ ஆலோச‌னை ம‌ற்றும் பெற்றோர்களுக்கான‌ விள‌க்கப்ப‌குதியும் இட‌ம் பெற்றுள்ள‌து.ஐபோனில் கேட்கும் வ‌ச‌தியும் உண்டு.
————————–
http://www.smories.com/

புதிய ஆடையோடு போஸ்

புதிய ஆடையை அணிந்து கொண்டவுடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது சொல்லுங்கள்?அது மட்டுமா புதிய ஆடையை அணிந்து கொண்ட பிறகு நெருக்கமானவர்களிடம் இந்த உடை எப்படி  இருக்கிறது என்று கருத்து கேட்கவும் ஆர்வம் இருக்கும் அல்லவா?
மனதார செல்கின்றனரோ ஒப்புக்கு சொல்கின்றனரோ அணிந்திருக்கும் ஆடை பற்றி நண்பர்களும் தெரிந்தவர்களும் பாராட்டி டொல்வதை கேட்டால் உற்சாகமாகதான் இருக்கும்.
இண்டெர்நெட் யுக‌த்தில் இந்த புத்தாடை அணிந்தவுடன் நல்லாயிருக்கா என்று கேட்கும் பழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல ஒரு அழகான இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?இந்த தளத்தின் மூலம் புதிய ஆடை பற்றி உலகம் முழுவதும் கருத்து கேட்கலாம் என்பது தான் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.
பார்க்க‌லாம்;ப‌கிர‌லாம் என்று சொல்வ‌து போல‌ இஸ்விய‌ரிங் என்னும் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌ம் நீங்க‌ள் புதிய‌ ஆடையில் போஸ் த‌ர‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போஸ்க‌ளை பார்க்க‌லாம்.
ஆடை பிரிய‌ர்க‌ளுக்கான‌ இணைய‌த‌ள‌ம் என்றும் இத‌னை சொல்ல‌லாம்.அதைவிட‌ ஆடைக‌ள் மூல‌ம் த‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கான‌ த‌ள‌ம் என்றும் சொல்ல‌லாம்.
இன்று நீங்க‌ள் அணிந்திருக்கும் ஆடை என்ன? என்று கேட்கும் இந்த‌ த‌ள‌த்தில் அத‌ற்கு ப‌தில் அளிக்கும் வ‌கையில் புத்தாடை அணிந்த‌ப‌டி போஸ் கொடுக்கும் உங்க‌ள் புகைப்ப‌ட‌த்தை ச‌ம‌ர்பிக்க‌லாம்.
இத‌ற்காக‌ நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் புதிய‌ உடையில் ஒரு புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டு அத‌னை இங்கு ச‌ம‌ர்பித்தால் போது. உடைக்கான‌ அறிமுக‌ குறிப்பை ஒரிரு வார்த்தைக‌ளீல் குறிப்பிட்டு அவ‌ற்றை எங்கே வாங்கினீர்க‌ள் என்றும் தெரிவிக்க‌லாம்.
இந்த‌ புகைப்ப‌ட‌த்தை டிவிட்ட‌ர் ,பேஸ்புக் ,இமெயில் மூல‌ம் நண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி வைக்க‌ முடியும்.ச‌க‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ உடையை பார்த்து விட்டு க‌ருத்து தெரிவிக்க‌வும் வ‌ச‌தி உண்டு.
நீங்களும் இப்ப‌டி ம‌ற்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் உடைக‌ளை பார்க்க‌லாம்,ர‌சிக்க‌லாம்,க‌மென்ட் அடிக்க‌லாம்.அப்ப‌டியே புதிய‌ டிசைனில் என்ன‌ என்ன‌ ஆடைக‌ள் அறிமுக‌மாகியிருக்கின்றான‌ என்றும் தெரிந்து கொள்ள‌லாம்.கூட‌வே அவை எங்கே வாங்க‌ப்ப‌ட்டன‌ என்ப‌தையும் அறிந்து கொள்ள‌லாம்.
ப‌ஸ்சிலோ ரெயிலிலோ லேட்ட்ஸ்ட் டிசைனில் உடுத்திச்செல்ப‌வ‌ர்க‌ளை பார்க்கும் போது சில‌ருக்கு அந்த‌ ஆடை எங்கே கிடைக்கும் என‌ தெரிந்து கொள்ளும் ஆர்வ‌ம் உண்டாகும் அல்ல‌வா?ஆனாலும் முன்பின் தெரியாத‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி பேசுவ‌து என்ற‌ த‌ய‌க்க‌மும் ஏற்ப‌ட‌லாம்.
இந்த‌ த‌ள‌மோ அத்த‌கைய‌ ப‌ட‌ப‌ட‌ப்போ த‌ய‌க்க‌மோ இல்லாம‌ல் புதிய‌ ஆடைக‌ள் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ சுல‌ப‌மாக‌ வ‌ழி செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ கூடுத‌ல் வ‌ச‌தி புகைப்ப‌ட‌த்தில் பார்ப்ப‌து போன்ற‌ ஆடைக‌ளை எங்கெல்லாம் வாங்க‌ முடியும் என‌ தெரிந்து கொண்டு ஆன்லைனிலேயே ஆர்ட‌ர் செய்யலாம் என்ப‌தே.
அணியும் ஆடைக‌ள் உங்க‌ள் ஆளூமையை அடையாள‌ம் என‌வே அவ‌ற்றை வெளீப்ப‌டுத்துவ‌து வெறும் சுவார‌ஸ்ய‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அது உங்க‌ளைப்ப‌ற்றிய‌ உள்ளொளியையும் வெளிப்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து என‌ தெரிவிக்கும் இந்த த‌ள‌ம் எத‌னையும் ப‌திவு செய்வ‌தே அத‌னை மேம்ப‌டுத்திகொள்வ‌த‌ற்கான‌ வ‌ழி என்று சொல்லி புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ ஊக்குவிக்கிற‌து.
பேஷ‌ன் மூல‌ம் மற்ற‌வ்ர்க‌ளோடு பேசி தொட‌ர்பு கொள்ள‌லாம் என்றும் சொல்லும் இந்த‌ த‌ள‌ம் புதிய‌ ஆடைக‌ளை க‌ண்டுகொள்ளுங்க‌ள் என்றும் உற்சாக‌ம் அளீக்கிற‌து.கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் நட்பை தேடிக்கொள்ளவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.ஆனால் ஆடைகள் மூலம் மட்டுமே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் இந்த தளம் கொஞ்ச்ம சுவாரஸ்யமானது தான்.
இதில் இட‌ம்பெற்றுள்ள‌வ‌ர்க‌ளின் உற்சாக‌மான‌ போஸ்க‌ளையும் முக‌த்தில் பொங்கும் புன்ன்கையையும் பார்த்தால் ந‌ம‌க்கும் உற்சாக‌ம் தொற்றிக்கொள்கிற‌து.ஆனால் எல்லோருமே மேல்நாட்டு ஆடை அணிந்து தான் காட்சி தருகின்ற‌ன‌ர்.அமெரிக்காவை மைய‌மாக‌ கொண்ட‌ த‌ள‌ம் என்ப‌தால் இப்ப‌டி இருக்க‌லாம்.
ந‌ம்ம‌வ‌ர்க‌ளும் ர‌ங்க‌நாத‌ன் தெருவுக்கு போன‌ கையோடு கேமிராவில் ஒரு கிளிக் செய்து இந்த‌ த‌ள‌த்தில் அத்னை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.புதிய‌ சேலை ம‌ற்றும் புத்த‌ம் புதிய‌ சுடிதார் ர‌க‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ இதைவிட‌ சிற்ந்த‌ வ‌ழி ஏது?
——–
http://iswearing.com/

Friday 25 June 2010

மொபைல் போன்களுக்கு 11 இல்க எண்

பைல் போன் இணைப்பிற்கான எண்களை 11 இலக்க எண்ணாக மாற்றும் திட்டத்தை அரசு சற்று தள்ளிவைத்துள்ளது. சுனாமி வேகத்தில் மொபைல் இணைப்புகள் பெருகி வருவதால், மொபைல் இணைப்பிற்கான எண்களை 11 இலக்கமாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது எனச் சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

2010 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இது அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை முதலில் இதற்கு இன்னும் அவகாசம் தேவை எனக் கேட்டனர். தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ஒரு இலக்கத்தை அதிகரிப்பதால், மிகப் பெரிய அளவில் சேவைக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றும், இது பல மாதங்கள் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாற்றம் அவசரத்தில் அமல் செய்யப்பட்டால், நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிடும் என்று அரசு கருதுகிறது. எனவே தான் இந்த திட்டத்தினை அரசு தள்ளி வைத்துள்ளது.

இதற்குப் பதிலாக இந்திய செல்லுலர் அசோசியேஷன் இன்னொரு மாற்று வழியை முன் மொழிந்துள்ளது. அதன்படி எண்கள் 10 இலக்கம் கொண்டவையாகவே இருக்கும். ஆனால் முதல் இலக்கம் இப்போது 9 ஆக மட்டுமே இருப்பதனை 7 மற்றும் 8 ஆகவும் வைத்துக் கொள்ளும் முறையை ஆய்வு செய்திடக் கேட்டுள்ளது.

இதன் மூலம் மேலும் 200 கோடி இணைப்புகளைத் தர முடியும். அடுத்த ஏழு அல்லது பத்து ஆண்டுகளுக்கு எண் பிரச்னையே வராது என்றும் அறிவித்துள்ளது.

தற்போது உள்ள 9ல் தொடங்கும் 10 இலக்க எண் திட்டம் 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 2030 வரை இதில் பிரச்னை இருக்காது என்று அரசு அப்போது எண்ணியது. ஏனென்றால் அப்போதைய எதிர்பார்ப்பின்படி 50 கோடி இணைப்பு என்ற இலக்கு 2030ல் தான் எட்டப்படும் என அரசு எண்ணியது.

ஆனால் 21 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2009லேயே இந்த எண்ணிக்கையை மொபைல் சேவை இணைப்பு அடைந்ததால் தற்போது பிரச்னை எழுந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவையும் மிஞ்சும் வகையில் இந்தியாவில் மொபைல் போன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 13 நிறுவனங்கள் சேவை வழங்கும் பிரிவில் போட்டியிடுகின்றன. மேலும் நான்கு நிறுவனங்கள் வரும் ஆண்டில் தங்கள் சேவையைத் தொடங்க இருக்கின்றன

அடுத்த பில்கேட்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில், உலகின் பெரிய நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கிடையில், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு நடத்திய தேசியளவிலான சர்வே வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு தகவல்: உலகளவில் பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் பில்கேட்ஸ். இவரை போன்று, அடுத்து உருவாகும் உலகளவில் பெரிய கோடீஸ்வரர், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமெரிக்கர்களில் 40 சதவீதத்தினர், இந்தியா அல்லது சீன நாட்டில் இருந்து தான், அடுத்த பில்கேட்ஸ் உருவாவார் என தெரிவித்து உள்ளனர். சர்வதேச அளவில், அமெரிக்கா சரிவைச் சந்தித்துள்ளது.

ஆனால் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், வளர்ச்சியடையத் துவங்கி உள்ளன. கேள்விக்கு பதிலளித்த அமெரிக்கர்களில் 74 சதவீதத்தினர், அடுத்தாண்டு, அமெரிக்கா உலகளவிலான போட்டியில், தன் நிலையை தொடர்ந்து பராமரிக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதில், பதிலளித்தவர்களில், 68 சதவீதத்தினர் புதிய முறைகளே எதிர்கால வேலை வாய்ப்பு மற்றும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்புகின்றனர். அமெரிக்காவில் நிலவும் பொருளதார பற்றாக்குறை, வருங்கால சந்ததியினரின் வளத்தை பாதிக்கும் என, 60 சதவீதத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டது

ஆன்லைன் கீபோர்டு

இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர்.

இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் ரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drumsமற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம்.

இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions.

இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.

இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது.

இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம்.

நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50
[cmalarnews_63508242369.jpg]

Tuesday 22 June 2010

இணையம் - தெரிந்ததும் தெரியாததும்

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.


Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

Sunday 20 June 2010

டெஸ்க்டாப்பில் ஐகான்கள் அதிகமா?

மனம் போன போக்கில் டெஸ்க்டாப்பில் போல்டர்கள் மற்றும் பைல்களை சேவ் செய்து வைப்பது நம்மில் பலரிடையே இருக்கும் மோசமான பழக்கமாகும்.

இதனால், டெஸ்க்டாப்பில் தேவையற்ற ஐகான்கள் சிதறிக் கிடக்கும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்தவரின் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய போட்டோக்களை, பூஜிக்கும் தெய்வத்தின் படங்களைத் திரையில் டெஸ்க் டாப்பில் வைத்திருப்பார்கள்.

இந்த தேவையற்ற ஐகான்கள், அந்தப் படங்களில் உள்ளவரின், முகத்தில், கண்களை அல்லது வேறு பகுதிகளின் மேலாக அமர்ந்து, படத்தையே அசிங்கப்ப்டுத்தும் வகையில் இருக்கும்.

இதில் பெரும்பாலான ஐகான்கள், பயன்படுத்தப்படாமலேயே (வெகுநாட்கள் அல்லது மாதங்கள்) இருக்கும். சிலர் டவுண்லோட் செய்கையில், எங்கு டவுண்லோட் செய்தோம் என்று தெரிய, டெஸ்க்டாப்பிலேயே அவற்றை சேவ் செய்து வைப்பார்கள்.

பின்னர், அவற்றை வேறு சார்ந்த டைரக்டரிக்குக் கொண்டு சென்றாலும், டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகானை அழிக்க மறந்துவிடுவார்கள். இதுவும் டெஸ்க்டாப்பில் குவியும் ஐகான்களின் எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும்.

இணையத்தில் உலாவுகையில், குறிப்பாக வேலை வாய்ப்பு தளங்களில் செல்கையில், சில தளங்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கேட்கும். இவற்றிற்கு உடனடியாகத் தகவல்களை அனுப்ப, கையாளப்படும் பைல்களை, டெஸ்க்டாப்பில் போட்டு வைப்பார்கள்.

பேங்க் எண் போன்ற பெர்சனல் தகவல்கள் அடங்கிய பைல், வேலை வாய்ப்பு தேடுவதற்கான ரெஸ்யூமே எனப்படும் தகவல் குறிப்புகள் கொண்ட பைல்களை டெஸ்க் டாப்பிலும் பலர் சேவ் செய்து வைக்கின்றனர். இதனாலும் டெக்ஸ்டாப், சிதறிய குப்பை கொண்ட தட்டு போல காட்சி அளிக்கும்.

இதனை எப்படி சீர் செய்திடலாம். டெஸ்க்டாப்பிலேயே சில போல்டர்களை உருவாக்கலாம். இதில் பயன்படுத்தாத ஐகான்களை Unused Icons என்ற போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். பெர்சனல் தகவல்கள் உள்ள பைல்களை மற்றும் இன்டர்நெட் சார்ந்து இயக்கப்படும் பைல்களை, இன்டர்நெட் என்று பெயரிட்டு ஒரு போல்டரில் வைக்கலாம்.

அடிக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை, அப்டேட் என்ற பெயரில் ஒரு போல்டரில் வைக்கலாம். இதன் மூலம் ஐகான்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். டெஸ்க்டாப் சுத்தமாக, அழகாகக் காட்சி தருவதுடன், இந்த ஐகான்களுக்கான பைல்களைத் தேடி எடுப்பதும் விரைவாக நடைபெறும்.

ஜகான்கள் டெஸ்க்டாப்பில் குவியும் போது விண்டோஸ் இதற்கென ஒரு நினைவூட்டும் செய்தியைத் தரும். அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். நம்மில் பலர், அந்த மெசேஜை அலட்சியப் படுத்திவிடுவோம்.

ஏனென்றால், இந்த வேலை மிகவும் முக்கியமாக்கும் என்ற எண்ணம் தான் நம் நினைவில் ஓடும். பயன்படுத்துகிறோமோ இல்லையோ இந்த ஐகான்கள் அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிடுவோம்.

விண்டோஸ் கொடுக்கும் மெசேஜைப் பின்பற்றினால், அதுவாகவே வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஐகான்களை ஒவ்வொன்றாகக் காட்டி வேண்டுமா, நீக்கவா என்று கேட்டு சரி செய்திடும். மேலே சொன்ன வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, நம் டெஸ்க்டாப்பினைச் சுத்தமாக வைத்திருப்பது என்றும் நல்லது.

அசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்

இது டிஜிட்டல் கேமராவா அல்லது மொபைல் போனா என்று வியக்கும் வகையில் ஸ்பைஸ் நிறுவனம் தன் எஸ் – 1200 மொபைல் போனை வடிவமைத்து, மொபைல் மார்க்கட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. முகங்களை அடையாளம் கண்டு போகஸ் செய்வது, சிரிக்கும்போது எடுப்பது, இமைத்தால் கண்டு கொள்வது, போன்ற நவீன தொழில் நுட்பங்களுடன் இந்த கேமரா உள்ளது.

12 எம்பி திறன் கொண்ட கேமரா இணைந்த மொபைல் வரிசையில் இது மூன்றாவது போனாகும். போட்டியில் முன்னுக்கு வர இதன் விலை மிகவும் குறைவாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேமரா இருப்பதால், வழக்கத்தைக் காட்டிலும் சற்று தடிமனான போனாக இது உள்ளது.3 எக்ஸ் ஆப்டிகல் ஸூம், ஸெனான் பிளாஷ் தரப்பட்டுள்ளது. எடை 130 கிராம் மட்டுமே. தடிமன் 16 மிமீ இருப்பதால், பாக்கெட்டில் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.

2.4 அங்குல டி.எப்.டி. திரை 240 x 320 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. வால்யூம் கீ, கேமரா ஸ்டில், கேமரா வீடியோ என தனி கீகள், ஸூம் செய்திட கீ எனத் தனித்தனியே கீகள் உள்ளன. 32 ஜிபி வரை மெமரியை அதிகப்படுத்தும் கார்டுகளுக்கான போர்ட் உள்ளது. மியூசிக் பிளேயருடன் ஈக்குவலைசர் தரப்பட்டிருந்தாலும், இதன் செயல்பாடு அவ்வளவாக மனநிறைவளிக்கவில்லை.

எப்.எம். ரேடியோவின் வெளிப்பாடு துல்லிதமாகவும் சிறப்பாகவும் உள்ளது. போட்டோக்களுக்கு போட்டோ எடிட்டர் சாப்ட்வேர் பதிந்து தரப்படுகிறது. எட்ஜ் சப்போர்ட் இருப்பதால், நம் பி.ஓ.பி. மற்றும் ஐமேப் மெயில்களை டவுண்லோட் செய்திடலாம்.

ஸ்பைஸ் போன் பயன்படுத்துபவர்களுக்கான ஸ்பைஸ் கேங் சோஷியல் தளத்துடன் நேரடி இணைப்பு கிடைக்கிறது. அத்துடன் நிம்பஸ் இருப்பதால், மற்ற சோஷியல் தளங்களையும் அடையலாம். நெட்கோர் தொகுப்பு இமெயில் டு எஸ்.எம்.எஸ். தருகிறது.

இதே போல கிரிக்கெட், வேலைவாய்ப்பு, லேட்டஸ்ட் செய்திகளுக்கான தொடர்புகள் எளிதாக்கப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத், யு.எஸ்.பி.2, டிவிக்கான அவுட்புட் ஆகியன மற்ற சாதனங்களுடனான தொடர்பினை எளிதாக்குகின்றன. இவற்றுடன் அடிப்படை வசதிகளான கால்குலேட்டர், காலண்டர், அப்பாய்ண்ட்மென்ட் டயரி, டாஸ்க் மேனேஜர், அலாரம் கிளாக் போன்றவையும் உள்ளன.

இதன்1020mAh பேட்டரி தொடர்ந்து 3 மணி நேரம் பேசும் திறன் தருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், நிதானமான பயன்பாடு இரண்டு நாட்களுக்குக் கிடைக்கிறது. இதன் குறியீட்டு விலை ரூ.14,500 என்பதால், போட்டியிடும் சோனி மற்றும் சாம்சங் போன்களுடன் இது வாடிக்கையாளர்களைக் கவரும் என்பதில்

சூடு பிடிக்கும் ஹாட் மெயில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஹாட்மெயில் – ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட் மெயில் என்று இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் அதனை அப்படியே இயக்கத் தொடங்கியது. யாஹூ மெயில் முந்திக் கொள்ள, ஹாட் மெயில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 

இடையே வந்த கூகுளின் ஜிமெயில், புயல் வேகத்தில் வசதிகளைத் தரத் தொடங்கியவுடன், அதன் இடத்தை யாரும் நெருங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வசதிகளைத் தந்து வாடிக்கையாளர்களை, வேறு சிந்தனையின்றித் தன் பக்கமே இறுத்திக் கொண்டது ஜிமெயில். இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது.

மைக்ரோசாப்ட் இப்போது, தன் முழுக் கவனத்தினை ஹாட் மெயில் பக்கம் திருப்பியுள்ளது. அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய பொலிவான, பயனுள்ள இயக்கத்தினைத் தர முயற்சிக்கிறது. இந்த புதிய தளம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கிடைக்கும். 

இருப்பினும் தற்போது உருவாகி வரும் புதிய வசதிகள் குறித்துக் கிடைத்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றைப் படித்த பின்னர், ஹாட் மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய உறவை நிச்சயம் புதுப்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மெயில் கட்டமைப்பு:

 புதியதாகத் தரப்படும் பல வசதிகள், வெப்மெயில் தளங்களில் இதுவரை இல்லாத புத்தம் புதிய வசதிகளாகவே உள்ளன என்பது இவற்றின் சிறப்பாகும். ஜிமெயிலில் கூட இவற்றிற்கான இணை வசதிகள் இல்லை என்று கூடச் சொல்லலாம். 

ஜிமெயில் அடுத்தடுத்து வரும் இமெயில் மெசேஜ்களை, ஒரு உரையாடல் போலத் தொகுத்துத் தருகிறது. இது ஜிமெயிலைப் பொறுத்தவரை மாறாததாக உள்ளது. இப்படித்தான் நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜிமெயில் எதிர்பார்க்கிறது. ஆனால் ஹாட் மெயில் இதில் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறது. 

பழைய படி வரிசையாக வைத்துக் கொள்ளலாம்; அல்லது ஜிமெயில் போல உரையாடலாகவும் மேற்கொள்ளலாம். இரண்டிற்கும் ஆப்ஷன் தரப்படுகிறது. இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்கதாக இருக்கும். 

மற்ற வசதிகள் அனைத்தும் இரண்டு வகைகளில் உள்ளன. குழப்பமான இன்பாக்ஸைச் சரி செய்பவை. அடுத்து மெசேஜ்களுடன் வரும் போட்டோ, டாகுமெண்ட் மற்றும் பிற இணைப்புகளின் அடிப்படையில், இமெயில்களைக் கையாண்டு காட்டும் வசதிகளாகும்.

பிடிக்காத இமெயில் ரத்து: 

ஒருவர் அனுப்பிய மெசேஜ்கள் உங்களுக்கு அறவே பிடிக்கவில்லை! என்ன செய்வீர்கள்? வந்து விழுந்த இ மெயில் மெசேஜ்களை மொத்தமாக செலக்ட் செய்து அழித்துவிடுவீர்கள். அடுத்து மீண்டும் அவர் அனுப்பினால்? ஹாட் மெயிலில் இனி அந்த இமெயில் முகவரியிலிருந்து மெசேஜ் வந்தால், ஹாட் மெயில் தானாகவே அழித்துவிடும். இதன் மூலம் குப்பை மெயில்கள் உங்கள் இன் பாக்ஸை நிரப்புவது தடுக்கப்படும்.

புதிய வியூ மெனு: 

புதியதாகத் தரப்படும் இந்த வியூ மெனு மூலம், நீங்கள் படிக்காத மெசேஜ்களைத் தனியே பட்டியலிடுதல், குறிப்பிட்ட முகவரியிலிருந்து கிடைக்கும் மெயில்களை மட்டும் காணுதல், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்களிலிருந்து வந்த மெயில்களை மட்டும் பார்த்தல் ஆகிய வகைகளில் பார்க்கலாம். 

மேலும் இடது பக்கம் தரப்படும் "Quick views" மெனுவின் மூலம், நீங்கள் குறித்த வைத்த மெயில்கள், போட்டோக்கள் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், டாகுமெண்ட் இணைக்கப்பட்ட மெயில்கள் மட்டும், கூரியர் நிறுவனங்களிலிருந்து வந்துள்ள மெயில்கள் மட்டும் எனத் தனித் தனிப் பட்டியல்களாக மெயில்களைக் காணலாம். 

போட்டோக்கள் அட்டாச் செய்யப்பட்டு அல்லது போட்டோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டு மெயில்கள் வந்தால், அவை தனியே ஒதுக்கப்பட்டு, அதில் உள்ள படங்கள்,உங்கள் இன்பாக்ஸ் மீது பிரசன்டேஷன் தொகுப்பாகக் காட்டப்படும். ஆனால் இந்த வசதி பிகாஸாவில் உள்ள போட்டோக்களுடன் செயல்படவில்லை. 

இதற்கான காரணம் தெரியவில்லை. இதே போல மெயில் செய்திகளில் யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், இன் பாக்ஸிலிருந்து வெளியேறாமலேயே, அந்த வீடியோக்களைக் காணும் வசதி தரப்படுகிறது. 

போட்டோ ஷேரிங்: 

இந்த ஹாட்மெயில் தளத்திலேயே, போட்டோ ஷேரிங் வசதியும் தரப்படுகிறது. மைக்ரோசாப்டின் ஸ்கை டிரைவில் போட்டோக்களை சேவ் செய்கையில், அவற்றைக் காண நீங்கள் அனுமதிக்கும் நண்பர்களின் இமெயில் முகவரிகளைத் தந்துவிட்டால், இந்த தளமே அவர்களுக்கு அந்த செய்தியை மிக அழகான மெயில்கள் மூலம் அனுப்பும். 

இந்த இமெயில்கள் அவர்களுக்குச் சென்றவுடன், அவர்கள் இந்த போட்டோக்களை, ஒரு ஸ்லைட் ÷ஷா காட்சியாகக் காணலாம். அவர்களுக்கு விண்டோஸ் லைவ் முகவரி ஐ.டி. இருப்பின், அவர்கள் இந்த போட்டோக்கள் குறித்த தங்கள் குறிப்பினைப் பதியலாம்.

"பிங் மூலம் தேடல்'': 

இமெயில் விண்டோவில் "From Bing" என்ற வசதி தரப்படுகிறது. இதன் மூலம் இமேஜஸ், கிளிப் ஆர்ட், வீடியோஸ், மேப்ஸ் மற்றும் இணையதளங்களைத் தேடும் வசதி கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை அப்படியே ஒரு கிளிக் மூலம் உங்கள் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.

வெப் அப்ளிகேஷன் இணைப்பு:

 ஹாட் மெயில் இமெயில் இன்பாக்ஸுடன், வெப் அப்ளிகேஷன்கள் இணைக்கப்படுகின்றன. மெயில் மெசேஜ் ஒன்றுடன் வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பார்மட்டில் ஏதேனும் ஒரு பைல் அட்டாச் செய்யப்பட்டிருந்தால், ஹாட் மெயில் உங்களின் அனுமதி கேட்டு, அதனை மைக்ரோசாப்ட் அண்மையில் தந்து வரும் வெப் அப்ளிகேஷன் மூலம் திறக்கும். 

இந்த பைல்களை எடிட் செய்திடவும் அனுமதிக்கும். நீங்கள் அந்த மெசேஜுக்கு பதில் அனுப்பினால், ஹாட் மெயில் வெப்பில் உள்ள, நீங்கள் எடிட் செய்த பைலுக்கான லிங்க் கொடுத்து, நீங்கள் மேற்கொண்ட எடிட்களைக் காட்டும். இது ஏறத்தாழ கூகுள் டாக்ஸ் எனப்படும் வெப் அப்ளிகேஷனை ஒத்தது என்றாலும், கூகுள் தரும் அனைத்து வசதிகளும் இதில் தரப்படவில்லை. குறிப்பாக கூகுள் வழங்கும் பி.டி.எப். வசதி இல்லை.

மொபைல் வழி இமெயில்: 

மொபைல் போன்களுக்கான, மொபைல் பிரவுசர் பதிப்பு ஒன்றை ஹாட்மெயில் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனில் இருந்து மெயில்களைப் படிக்கலாம். இருப்பினும் வேறு மொபைல் பிரவுசர் மூலமும் உங்களுக்கு வந்துள்ள மெயில்களைப் படிக்க ஹாட் மெயில் அனுமதிக்கிறது. 

ஹாட்மெயில் இது போன்ற பல புது வசதிகளுடன், தன் அடுத்த இன்னிங்ஸை இமெயில் போட்டியில் விளையாட வருகிறது. இந்த முறை தன் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி நிறைய வசதிகளைத் தரும் என்று எதிர்பார்ப்போம்.

பாதுகாப்பான கூகுள் தேடல்

சர்ச் இஞ்சின் என்றாலே, அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் சாதனமாக கூகுள் இயங்கி வருகிறது. எனவே தான் கூகுள் நிறுவனமும் இதில் கூடுமானவரை விரைவான, பாதுகாப்பான தேடல் அனுபவத்தினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.


பாதுகாப்பினைத் தருவதில், அண்மையில், கூகுள் இன்னொரு அம்சத்தினை வழங்கியது. வழக்கமான கூகுள் தேடல் தளத்துடன், இன்னொரு பாதுகாப்பான தளத்தினை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன் முகவரிhttps://www.google.com/. இது பாதுகாப்பான தளம் என்பது இதில் உள்ள https என்னும் முகவரிச் சொல்லைக் கொண்டு அறியலாம். 

இந்த தளத்தின் மூலம் தேடுகையில், தேடுதலை மேற்கொள்ளும் கம்ப்யூட்டருக்கும், கூகுள் சர்ச் தளத்திற்கும் இடையேயான தேடல் விபரங்கள் மாற்றிச் சுருக்கப்பட்டு(encryption) அனுப்பப்படுகின்றன. இதனால் இன்டநெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் போல உள்ளவற்றிற்கு, இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. 

குறிப்பாக பொது இன்டர்நெட் மையங்களில் தேடுதலை மேற்கொள்பவர்கள், இந்த பாதுகாப்பான கூகுள் தேடல் தளம் (https://www.google.com/.) மூலம் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. வழக்கமான தளத்திற்கும், இந்த பாதுகாப்பு தரும் தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வேறுபாடுhttp யுடன்s சேர்க்க வேண்டும். 

அல்லது இதற்கான யூசர் ஸ்கிரிப்ட்டை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். டவுண்லோட் செய்திடhttp://userscripts.org/ scripts/show/5951  என்னும் முகவரிக்குச் செல்லவும். இன்னும் எளிய வழி, இந்த தளம் சென்று பின் அதனை ஒரு புக்மார்க்காக அமைத்து இயக்குவதுதான்.



சுரண்டல்கள்

இந்தியா முழுவதிலும் ஆற்றில் மணல் சுரண்டப்படுகிறது. மலைகள் உடைக்கப்படுகின்றன.  சுரங்கங்கள் வெட்டி, கனிமங்கள் எடுக்கப்படுகின்றன. 

விடுதலை பெற்ற இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய கனிமச் சுரண்டல்கள் மிகப் பெருமளவில் நடக்கத்தொடங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு மோசமடைந்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அறிவியல் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்திய பின்னர் இப்போதுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்காற்றுச் சட்டம் 1957-ல் சில புதிய நிபந்தனைகளைப் புகுத்தும்படி மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்.

அமைச்சகம் கூறியுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அவர்கள் இன்னும்கூட இதைத் தீவிரமானதாக எண்ணவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரலை ஓய்ப்பதற்காக எடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கையோ என்றுகூடத் தோன்றுகிறது.

எது சாதாரணமான கனிமங்கள், எவை முக்கியமான கனிமங்கள் என்று பாகுபடுத்துவதை, அவற்றின் பொருளாதார மதிப்பை வைத்துத் தீர்மானிக்க வேண்டும் என்பது, இப்போது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்படும் முக்கிய நிபந்தனை.

தற்போதைய நிலவரப்படி, ஆற்றுமணல், சுண்ணாம்புக் கற்கள் வெறும் கற்கள் போன்றவை சாதாரணமான, முக்கியமல்லாத கனிமங்கள் பட்டியலில் உள்ளன. இதுநாள்வரை இவற்றை ஏலம் விடுவதில் எத்தகைய கட்டுப்பாடும் இருக்கவில்லை. அதனால், மாநிலங்கள் அனைத்திலும், தமிழகம் உள்பட, எத்தகைய மோசமான விளைவுகள் நடந்தன, நடந்துகொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆற்றுப்படுகையை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் மணல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மிக மோசமான மண் சுரண்டல் நடந்து முடிந்துவிட்டது. இப்போது புதிய விதிமுறைகள் மூலம் இந்த மணல் அதன் சந்தை மதிப்புக்கு ஏற்ப ஏலம் விடப்படவேண்டும் என்கிற புதிய நிபந்தனையால் என்ன பயன் விளையப் போகிறது? 

மிகக் குறைந்த கட்டணத்துக்கு ஆற்றுமணல், பாறைகள், சுண்ணாம்புக் கற்கள் போன்றவற்றை அள்ளவும் வெட்டவும் நம் அரசியல்வாதிகளின் பினாமிகளுக்கு அனுமதி வழங்கி அவர்களும் முடிந்தமட்டும் சுரண்டிவிட்டார்கள். இப்போது இந்த விதிமுறைகள் அவர்களை எப்படித் தடுத்துவிடப்போகிறது.

ஆற்று மணல் அள்ளும்போது 3 மீட்டர் ஆழத்துக்குமேல் போகக்கூடாது என்றும், பாலங்கள் அருகில் மணல் அள்ளும் பணி நடக்கக்கூடாது என்றும் புதிய விதிமுறை கூறுகிறது. 3 மீட்டர் ஆழத்துக்குமேல் ஆற்றுமணல் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனை தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஆனாலும்கூட, ஒரு லாரியே மறையும் அளவுக்கு பள்ளம் தோண்டி மணலை அள்ளிச் செல்லும் படங்களை பத்திரிகைகள் வெளியிட்டதுதான் மிச்சம். ஆனால் இந்த முறைகேடுகள் தடுக்கப்படவே இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் ஆறுகளின் குறுக்காக கட்டப்பட்டுள்ள பாலங்கள் அருகில் மிக மோசமான மணல் கொள்ளை நடந்துள்ளதால், இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பாலங்கள் பலம் குறைந்துபோய், விழும் அல்லது சரியும் என்கிற கசப்பான உண்மைதான் நாம் நடைமுறையில் காண்பதாக இருக்கிறது. மணலும் போய், பாலமும் போய், ஆற்றுப்படுகை கட்டாந்தரையானதால் நிலத்தடி நீரும் போய் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையில் இப்போது புதிய நிபந்தனைகளை அறிவிக்கிறார்கள்.

இந்தப் புதிய நிபந்தனைகளில்கூட ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதைக் காணலாம். எந்தவொரு சாதாரண கனிம ஏலங்கள் எதுவென்றாலும், குறைந்தபட்சம் 5 ஹெக்டேருக்குக் குறையாமலும், 5 ஆண்டுகளுக்குக் குறையாத கால அளவிலும் அமைய வேண்டும் என்கிறது புதிய நிபந்தனை. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் என்பது, சுரண்டல்பேர்வழிகளுக்கு மிகமிக பெரிய அவகாசத்தை அரசே வழங்குவதற்கு ஒப்பானது.

ஒரு மாநில அரசு பதவியேற்றதும் பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, 5 ஆண்டுகளுக்கு (அடுத்த தேர்தல்வரை) தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களை விருப்பம்போல அள்ளியும் வெட்டியும் செல்ல அனுமதிக்கத்தான் இந்த கால அளவு உதவுமே தவிர, வேறு எதற்கும் இல்லை.

சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுக்க சிமென்ட் ஆலைகள் அரசுக்குத் தரும் பணத்தையும், அவர்கள் அதனை சிமென்டாக மாற்றி விற்கும்போது ஏற்படும் விலைமாற்றத்தையும் ஒப்பிட்டால் பல நூறு மடங்கு இடைவெளி இருப்பதைக் காண முடியும்.

அரசுக்குப் பெரும் இழப்பும், இயற்கைக்குப் பெரும் பாதகமும் நடந்து முடிந்தபிறகு, எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள், இப்போதாவது விழிப்படைந்தார்களே என்கிற பெருமூச்சு வரவழைக்கிறதே தவிர, நம்பிக்கை தருவதாக இல்லை.

சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்படும் பல சட்டங்கள் கண்துடைப்புச் சட்டங்களாக இருக்கின்றனவே தவிர, பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் உள்ளார்ந்த நோக்குடன் நிறைவேற்றப்படுவதாகத் தெரியவில்லை. சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளை அடைப்பதற்குப் பதிலாக, ஓட்டைகள் நிறைந்த சட்டங்களை நிறைவேற்றி பாலுக்குக் காவலாகவும் பூனைக்குத் தோழனாகவும் இருக்க விரும்பும் நிர்வாகத்தைத்தான் நாம் தொடர்ந்து சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

காடுகளை அழிக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. வனப்பாதுகாப்புக்காக ஒரு துறையே இயங்குகிறது. ஆனால், காடுகளை அழித்துக் கனிமங்களைத் தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியும் வழங்கப்படுகிறது. இரண்டுக்குமே சட்டங்கள் இருக்கின்றன. நாயைச் சுடுவதானால்கூடக் காரணம் கண்டுபிடித்துச் சட்டப்படிதான் சுடுவோம் என்று எக்காளமிட்டார்கள் ஆங்கிலேயக் கும்பினியார்.

கொள்ளையடிப்பதற்குக்கூட சட்டத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகள் சுதந்திர இந்திய அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும்.

குதிரைகள் ஓடிப்போனபின் லாயத்தைப் பூட்டிய கதையாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் இப்போது திடீரென்று விழித்துக் கொண்டிருக்கிறதே, இதன் பின்னணிதான் என்ன? யாரைப் பாதுகாக்க இப்படி ஒரு திடீர் யோசனை?