tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday 17 March 2011

திருப்பூர் - திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]

”செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?”

- என்று பாடுவார் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில். சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை.
ring-spun-tshirts-tirupur
தொழில்நலத்திற்காக, உலகச் சந்தையில் வெல்வதற்காக, சொந்தநாட்டு மண்ணை மலடாக்கிய திருப்பூர்த் தொழில்துறையினரின் சுயநலத்தைக் காணும்போது, பாரதியின் மந்திர வார்த்தைகள்தாம் நினைவுக்கு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் முத்திரை பதித்துவரும் திருப்பூர் நகரம், நாட்டிற்கு ஆண்டுதோறும் ரூ.14,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் உழைப்பாளிகளின் நகரம், நாட்டு மக்களின் உள்ளாடைகளை ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்துவரும் தொழில்முனைவோரின் நகரம், இதற்காக இழந்தது மிக அதிகம். அதன் அடையாளம்தான், சாக்கடை ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியான நொய்யல்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலையடிவாரத்தில் துவங்கி, கொடுமுடி அருகே நொய்யல் கிராமத்தில் காவிரியில் கலக்கும்வரை கொங்கு மண்டலத்தை பசுமையாக்கிய நதி நொய்யல்; அது பழங்கதை. நொய்யலின் குறுக்கே ஒரத்துப்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள அணையில் தேங்கியிருக்கும் நீரைத் திறந்துவிடக் கூடாது என்று விவசாயிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு ஆற்றுநீர் இப்போது மாசுபட்டிருக்கிறது. பலகோடி செலவில் கட்டப்பட்ட இந்த அணை தற்போது பயன்பாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதற்கு காரணம் திருப்பூர். இதுதான் புதுக்கதை.
திருப்பூரின் அசுரத் தொழில் வளர்ச்சியால் 5 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது; நாட்டின் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சில ஆயிரம் அதிகரித்துள்ளது; நாட்டின் பொருளாதாரத்திற்கும் திருப்பூர் உறுதுணை புரிகிறது. எல்லாமே, செருப்புத் தோலுக்காக செல்வக் குழந்தையைக் கொன்ற கதையாக, சாய ஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டால் மாறிப் போயிருக்கிறது.
tirupur-dyeing-units-discharging-toxic-effluents
பல்வகை தொழில்வளமும் நிறைந்த வெளிநாடுகள் வண்ணமயமான பின்னலாடைகளுக்கு நம் நாட்டை, அதுவும் திருப்பூரை நாடி வந்தது ஏன் என்று இப்போது தெரிகிறது. அந்த நாடுகளில் சுற்றுச்சூழல் சட்டங்கள் கடுமையாக உள்ளதால், அங்கு சாயமிடுதல் உள்ளிட்ட மாசுபடுத்தும் தொழில்களைச் செய்ய கட்டுப்பாடுகள் உள்ளன. எனவேதான், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பின்னலாடைகளை கொள்முதல் செய்து அணிந்து மகிழ்கின்றன மேலைநாடுகள். அதிலும் பின்னலாடை உற்பத்தி நாடுகளுக்குள் உள்ள வர்த்தகப் போட்டியைப் பயன்படுத்தி பேரம்பேசி விலையைக் குறைப்பதிலும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கைதேர்ந்தவை. அதையும் மீறித்தான் திருப்பூர் உலக அளவில் சாதனை புரிந்திருக்கிறது. ஆனால், அதற்காக திருப்பூர் கொடுத்துள்ள விலை மிக மிக அதிகம்.
திருப்பூர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் ஜவுளி நகரமாக இருந்தது. அப்போது கைத்தறி ஆடைகளுக்கு புகழ்பெற்ற சிறு நகரமாக இருந்த திருப்பூர், 1970-களின் துவக்கத்தில் பின்னலாடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. வெண்ணிற உள்ளாடைகளை மட்டும் உற்பத்தி செய்து வந்த பின்னலாடை நகரம், 1980-களில் வண்ண மயமான, நாகரிகமான, மதிப்புக் கூட்டப்பட்ட ஆடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. அப்போதுதான், சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை பெருகத் துவங்கியது. அவற்றின் எண்ணிக்கை 1990-களில் 1500-ஆக அதிகரித்தது. அந்த ஆலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரின் அபாயம் குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. சாயக் கழிவுநீர் எந்தச் சுத்திகரிப்பும் இன்றி சிற்றோடைகளிலும் திருப்பூரில் பாயும் நொய்யலிலும் எந்த சங்கோஜமுமின்றி கலக்கவிடப்பட்டது. அரசு நிறுவனமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலற்ற தன்மையும் ஊழலும், நதிநீர் மாசுபடக் காரணங்களாயின.
noyyal_river
30 ஆண்டுகளுக்கு முன் குடும்பத் தேவைக்கு நொய்யலில் ஊற்றுப் பறித்து நீரெடுத்த திருப்பூர் மக்கள் கண்முன்னாலேயே, நொய்யல் சாக்கடையாக மாறத் துவங்கியது. கோவை, திருப்பூர் நகரங்களில் பெருகிய மக்கள்தொகையினால் ஏற்பட்ட அதிபயங்கர விளைவான சாக்கடைக் கழிவும் இதே நொய்யலை பாழ்படுத்தியது. இன்சுவை நீர் வழங்கிய நொய்யலில், கடும் நெடியும் கருநிறமும் பொங்கும் நுரையும் இயல்பாயின. இந்தக் கழிவு நீர் ஒரத்துபாளையத்தில், அணையில் தேங்கி, சுற்றுவட்டார விவசாய நிலங்களை சீரழித்தபோதுதான் (1998) சூழல் மாசுபட்டதன் விபரீதம் புரிந்தது. அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. இதன் விளைவாக நொய்யல் நதியோர விவசாய நிலங்கள் களர் நிலங்களாயின; நிலத்தடிநீரின் கடினத் தன்மையும் மிக அதிகமாக உயர்ந்தது.
ஏனெனில் ஆண்டுதோறும் சாய (டையிங்), சலவை (பிளீச்சிங்) ஆலைகள் 1,500 டன் ரசாயன நிறங்கள், சோப்புத் தூள்களைப் பயன்படுத்துகின்றன. அந்தக் கழிவு அப்படியே கலந்ததால் ஜீவநதி செத்துப்போனது. அப்போதுதான் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பது துவங்கியது. ஆயினும் பாதி சுத்திகரித்த நிலையில் சாயக் கழிவுநீர் ஆற்றில் விடப்பட்டது. விவசாயிகளிடமிருந்து அபயக்குரல் எழத் துவங்கியது.
அரசோ, திருப்பூர்த் தொழில்துறையின் பிரமாண்டத்திற்கு அஞ்சி அமைதி காத்தது. வேறுவழியின்றி, நொய்யல் மாசுபட்டதால் சாகுபடியை இழந்த நொய்யல் பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பு (2004, ஜூலை), தொடர்ந்து சீரழிந்த நொய்யல் நதிக்கு ஆசுவாசமாக வந்தது.
oraththupalayam-dam1974-ஆம் வருடத்திய தமிழக நதிநீர் மாசுபாடு தடுப்புச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்ற அனுமதி பெறுவது அவசியம். அதற்குக் கட்டுப்பாடுகளும் உண்டு. அதற்கான அலகு ‘டிடிஎஸ்’ எனப்படும் கரையாத திடக் கழிவின் அளவாகும். இது நீரின் உப்படர்த்தியால் (பிபிஎம்) அளவிடப்படுகிறது. அதிகபட்சம் 2,200 பிபிஎம் உப்படர்த்தி மட்டுமே அனுமதிக்கப்படும். ஆனால், திருப்பூர் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடிநீரின் உப்படர்த்தி 5,000 பிபிஎம் ஆக அதிகரித்துவிட்டதை நீதிமன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டியது. இறுதியில், “நொய்யல் நதியை அரசு சீரமைக்க வேண்டும்; ஒரத்துப்பாளையம் அணையைத் தூர் வார வேண்டும்” என்ற உத்தரவுகளுடன், “நதிநீர் மாசுக்குக் காரணமான சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது.
நீதிமன்றத் தலையீட்டை அடுத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது வேகமெடுத்தது. சிறு சாய ஆலைகள் இணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தன. தவிர வசதியான சாய ஆலைகள் 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்கின. இதற்காக ரூ.800 கோடிக்கு மேல் திருப்பூர் தொழிலதிபர்கள் செலவிட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகள் நடந்துவந்த அதேநேரத்தில், நொய்யல் மாசுபடுவது குறையவே இல்லை. நொய்யல் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சுத்திகரிப்பு நிலையங்களில் ‘ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ (ஆர்.ஓ) எனப்படும் சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட சாய ஆலைகள் ஒப்புக்கொண்டன.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006 டிசம்பரில், ”2007 ஜூலை 31-க்குள் அனைத்து சாய ஆலைகளும் ஆர்.ஒ முறையில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும்; இதுவரை நொய்யலை மாசு படுத்தியதற்காக அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்படி குறுகிய காலமே சாயஆலைகள் அபராதம் செலுத்தின. ஆனால், அபராதம் அதிகம் என்று கூறி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டு 2009, அக். 6 வரை காலஅவகாசம் பெற்றன. மீண்டும் இந்த அவகாசம் 2010, ஜன. 5 வரை நீடிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.ஓ அமைக்கும் பணிகள் துவங்கின. அதிக முதலீடு செய்ய இயலாத சாய ஆலைகளும் வரைமுறை மீறிய சாய ஆலைகளும் (சுமார் 500) மூடப்பட்டன.
ஆர்.ஓ. அமைத்த பின்னரும் சாயக் கழிவின் அடர்த்தி குறையவில்லை. கழிவுநீரை ஆவியாக்கும் ‘எவாப்பரேஷன்’, அடர் வீழ்படிவைப் பொடியாக்கும் ‘கிறிஸ்டலைசர்’ தொழில்நுட்பங்களாலும் பெரும்பயன் விளையவில்லை. சாயமிடவும் சலவை செய்யவும் பயன்படுத்தும் ரசாயனங்களைச் சுத்திகரிப்பது மாபெரும் சவால்தான். அதில் திருப்பூர் ஆலைகள் தோல்வியுற்றன. சாதாரணமாகப் பயன்படுத்தும் தண்ணீரிலேயே 1,500 பிபிஎம் அளவில் டிடிஎஸ் இருக்கும்போது அதிகபட்ச டிடிஎஸ் 2,200 பிபிஎம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது சாத்தியமல்ல என்று தொழில்துறையினர் புலம்பத் துவங்கினர்.
tiruppur-dyeing-plants
இதனிடையே நொய்யல் விவசாயிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் நியமித்த மோகன் குழு, திருப்பூர் சாய ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள், நொய்யல் நதி ஆகியவற்றைப் பார்வையிட்டு உயர் நீதிமன்றத்திற்குத் தனது பரிந்துரையை அளித்தது. அதில், முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட பின்னரே (ஜீரோ டிஸ்சார்ஜ்) சாய ஆலைகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொழில் நிர்பந்தம் காரணமாக திருப்பூர் சாய ஆலைகள் ஏற்றன. எப்படியாவது நீதிமன்றத்தில் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ செய்வதாக ஒப்புக்கொண்ட சாய ஆலைகள், அது நடைமுறை சாத்தியமற்றது என்பதால், மீண்டும் சிக்கலில் ஆழ்ந்தன.
இதனிடையே “சாயக் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பது கடினம். எனவே அதனைக் குழாய் மூலமாக கடலுக்குக் கொண்டுசென்று சேர்ப்பதே பொருத்தமான தீர்வாக இருக்கும்” என்று திருப்பூர் தொழில்துறையினர் கூறத் துவங்கினர். அரசியல்கட்சிகளும் அதை எதிரொலித்தன. மாநிலத்தை ஆண்ட இரு கட்சிகளும் இத்திட்டத்திற்கு உதவுவதாக வாக்களித்தன. இதற்கென 2006-லேயே ரூ.800 கோடியில் திட்டம் தீட்டப்பட்டது.
ஜவுளி நகரங்களான கோவை, திருப்பூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கரூர் பகுதிகளின் சாயக் கழிவுப் பிரச்சினைக்கும் இதன்மூலமாக தீர்வு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. இத்திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.1,400 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பு, மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் காகித அளவிலேயே நின்றுவிட்டது.
நொய்யலில் தொடர்ந்து சாயக் கழிவுநீரைக் கண்காணித்த விவசாயிகள் சங்கம், மீண்டும் 2010-இல் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் பணித்தபடி மோகன் குழு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், நொய்யலில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சாயக் கழிவு நீர் கலந்துவருவதைச் சுட்டிக்காட்டியது. அதையடுத்து, உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவை கடந்த ஜனவரி 28-இல் அளித்தது.
”ஏற்கனவே அளித்த உத்தரவுப்படி செயல்படாத அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட வேண்டும்; இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்; சாய ஆலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற நீதிமன்ற உத்தரவால், தற்போது திருப்பூரிலுள்ள 754 சாய, சலவை ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்போது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை, தொடர் சங்கிலியில் துண்டு விழுந்துள்ளதால் திகைப்பில் தவிக்கிறது. பின்னலாடைத் துணிகள் (நிட்டிங் முடிந்த பிறகு) சாயமிடுதல், சலவை செய்தலுக்குப் பிறகே அடுத்த கட்டப் பணிகளான காம்பேக்டிங், பிரிண்டிங், கட்டிங், ஸ்டிச்சிங், அயர்னிங், பேக்கிங், செக்கிங், டெஸ்பாட்ச் உள்ளிட்ட பல படிநிலைகள் உள்ளன. மேலும் ஆடையின் மதிப்புக் கூட்டும் எம்பிராய்டரி, சீக்குவன்ஸ், எலாஸ்டிக், பட்டன் உள்ளிட்ட அலங்கார வேலைப்பாடுகள் உள்ளன. இந்தத் தொழில்களில் ஒவ்வொன்றிலும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றை சார்ந்து 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வதாக திருப்பூர் தொழில்துறையினர் கூறுகின்றனர். தவிர, இரண்டாம் தர ஆடைகள் விற்பனை, பனியன் கழிவு போன்றவற்றிலும் பல்லாயிரம் பேர் பணி புரிகின்றனர். இவர்கள் அனைவரும் இப்போது செய்வதறியாது நிலைகுலைந்து காணப்படுகின்றனர்.
இப்போது கட்டுரையின் முடிவிற்கு நாம் வர வேண்டிய நேரம். திருப்பூர் பலரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய நகரம். இப்போது முட்டுச்சந்தில் திரும்ப வழியில்லாத பாதையில் நிற்கிறது திருப்பூரின் முன்னேற்றம். இதற்கு காரணம் யார்?
சுற்றுச்சூழல் பாதிப்பின் அபாயம் அறியாமல் சுயநலனுடன் செயல்பட்ட தொழில் நிறுவனங்களா? நொய்யல் மாசுபட்டதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளா? எதைப் பற்றியும் கவலையின்றி பிரச்சினையை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு அரசியல் நடத்தும் அரசாங்கமா? நதிநீர் மாசுபடுவது குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி வாழும் நாட்டு மக்களா?
20060421005000402எப்படியோ, எல்லோரும் சேர்ந்து நதியை நாசமாக்கி, இப்போது நீதிமன்றம் தலையிட்ட பிறகு புலம்பத் துவங்கி இருக்கிறோம். இப்போதாவது விழிக்காவிட்டால் நமக்கு கதி மோட்சமில்லை. நமது எதிர்கால வாரிசுகளுக்கு நல்ல பொருளாதாரத்தை மட்டும் தந்து செல்வதால் பயனில்லை; அவர்களுக்கு நல்ல நீரையும் தூய சுற்றுச்சூழலையும் தர வேண்டிய கடமையும் நமக்கு உண்டு. திருப்பூர் நகரம் தற்போது படும் துயரம், நாட்டு மக்கள் அனைவருக்கும் பாடம்.
இந்த இடியாப்பச் சிக்கலிலிருந்து வெளிவர என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க, தொழில்துறையினர், அரசு, நீதிமன்றம், சுற்றுச்சூழல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாகிவிட்ட திருப்பூர் தொழில் துறையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துடன், விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டிய அத்தியாவசியமும் நம் முன்பு உள்ளது.
கண்களை விற்றுச் (சுற்றுச்சூழலை இழந்து) சித்திரம் வாங்காமல் (தொழில்துறை உயர்வு), அதே சமயம் இருக்கும் வாழ்வாதாரத்தையும் (திருப்பூர்) தொலைத்துவிடாமல் செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் என்ன செய்யப் போகிறோம்
திருப்பூர் சாயஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டிற்கும் இக்கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
திருப்பூர் வட்டாரத்தில் 1,500 சாய, சலவை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான சாய, சலவை ஆலைகள், தங்கள் தொழிலகங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழிவுநீரை இரவு வேளைகளில் திறந்துவிடுவது வழக்கமானது. ஒரு சாய ஆலை மட்டும் தவறு செய்வது யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை. இதேபோல பலரும் செய்யத் தலைப்பட்டபோது, நொய்யலில் சாயம் கலந்து பாய்ந்த கழிவுநீர் சாய ஆலைகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திவிட்டது.
உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மோகன் குழு நொய்யல் நதிப்படுகை முழுவதும் தீர ஆராய்ந்தது; பல சாய, சலவை ஆலைகளையும் அங்குள்ள சுத்திகரிப்பு வசதிகளையும் ஆராய்ந்தது. அதன் பிறகே, நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி செயல்படாமல், சில ஆலைகள் ரகசியமாக சாயக் கழிவை ஆற்றில் கலப்பதைக் கண்டறிந்தது. இறுதியில் மோகன் குழு அளித்த அறிக்கை, சாய, சலவை ஆலைகளுக்கு இப்போது ஆப்பு வைத்துவிட்டது. உயர் நீதிமன்றம் கடும் நடவடிக்கையாக சாய ஆலைகளை மூட உத்தரவிட்ட பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது தொழிற்துறை.



ஒருங்கிணைப்பின்மையே பெரும் குறைபாடு
water-purification-plants
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், சாய, சலவை ஆலைகளுக்குள் சரியான ஒருங்கிணைப்போ, கட்டுப்பாடோ இல்லாததுதான். பொதுவாக சாய ஆலைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் வகையில் வருபவை, வசதியான தொழிலதிபர்களால் நடத்தப்படுபவை. இவர்களுக்கு ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், கிறிஸ்டலைசேசன், எவாபரேசன் போன்ற தொழில்நுட்பங்களை நிறுவுவது பெரிய விஷயமல்ல. அதற்கான முதலீடு செய்யும் அளவுக்கு பண வசதி படைத்தவர்கள் 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவங்கினர்.
குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் சாயக்கழிவை படிகமாக்கும் கிறிஸ்டலைசேசன் (சாயக் கழிவு வீழ்படிவிளிருந்து நீரை ஆவியாக்குவதன்மூலமாக ரசாயனங்களைப் பிரிப்பது) தொழில்நுட்பத்திற்கு பெருமளவில் கான்கிரீட் தளம் வேண்டும். இதில் கிடைக்கும் கழிவுப்பொடியையும் வீசி எறிய முடியாது. அவையும் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டியவை. பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையங்களில் மூட்டை மூட்டையாக இந்தக் கழிவுப் பொடி குவிந்துள்ளது. இவற்றை மறுசுழற்சி செய்ய முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அடுத்த பிரிவில் வருபவர்கள் நடுத்தரத் தொழிலதிபர்கள். இவர்கள் சாய ஆலைகள் நடத்துவதை மட்டுமே தங்கள் பணியாகக் கொண்டவர்கள். பல கோடி முதலிட்டு சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவ வசதியற்ற இவர்கள் (460 சாய ஆலைகள்) ஒருங்கிணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை (சி.இ.பி) அமைத்துள்ளனர். இதற்கு அரசு மானியக் கடனுதவி வழங்கி இருக்கிறது. இவற்றிலும் சாயக் கழிவை முற்றிலும் நீக்குவதில் சிரமமே நிலவுகிறது.
tirupur-dyeing-small-scaleகடைசிப் பிரிவில் வருபவர்கள், சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினராகவே ஆக இயலாத வலிமையற்ற சிறு ஆலைகள். குடிசைத் தொழில் போல, சிறு இடத்தில் அவர்களது சக்திக்கு உகந்த அளவில் தொழில் நடத்தி வரும் இவர்களால் எந்த சுத்திகரிப்பு அமைப்பும் நிறுவ முடியாது. ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்திற்காக ரகசியமாக நடத்தப்படுபவை இவை.
அண்மையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்ட நிலையில், ரகசியமாக இயங்கிய இத்தகைய ஆலைகள் தொழில் கூட்டுக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. பெரும்பாலும் இந்த ஆலைகளிலிருந்து எந்த கட்டுப்பாடும் இன்றி கழிவு வெளியேற்றப்படுகிறது. சட்ட விரோதமாக செயல்பட்ட இத்தகைய சாய ஆலைகளை சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதென, சாய ஆலை உரிமையாளர் சங்க செயற்குழு (பிப். 15) முடிவு செய்தது. மாநகராட்சி எல்லைக்குள் சாம்பிள், பட்டன், ஜிப் டையிங் என்ற பெயரில் இயங்கும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி நிர்வாகத்தையும், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இவற்றில் முதல் பிரிவில் வரும் சாய ஆலைகள், திருப்பூரில் முன்னிலையில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களால் நடத்தப்படுபவை. அவர்களுடன் பிற இரு பிரிவினரும் இணைந்து செயல்படுவதில் பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு சிக்கல்கள் உள்ளன. உயர் நீதிமன்றத்தில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ எனப்படும் நூறு சதவிகித சுத்திகரிப்புக்கு உத்தரவாதம் அளித்தவர்கள், இவர்களே. சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் வசதியான ஆலைகள், பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துவிட்டதாக சிறு சாய ஆலைகள் குற்றம் சாட்டுகின்றன.
தவிர, வசதியான ஏற்றுமதியாளர்கள் சிலர், எதிர்காலத்தில் வரும் சிக்கல்களை உத்தேசித்து பெருந்துறை, பவானி போன்ற ஈரோடு மாவட்டப் பகுதிகளில் முன்கூட்டியே சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய சாய ஆலைகளை அமைத்துவிட்டனர். அவர்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து விலகி இருக்கிறார்கள். ஆக, சாய, சலவை ஆலைகளிடையே ஒருமித்த உணர்வோ, கட்டுப்பாடோ இல்லை என்பது தெளிவாகிறது.
”திருப்பூர் நகராட்சித் தலைவராக இருந்த சேர்மன் கந்தசாமி உயிருடன் இருந்த வரையில் சாய ஆலைகளை ஒருங்கிணைப்பதில் சிரமம் இல்லாது இருந்தது. அவரே சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவராக இருந்தார். அவரே கூட, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சங்க நடவடிக்கைகளில் வெறுப்புற்று விலகி இருந்தார்,” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத சாய ஆலை உரிமையாளர் ஒருவர்.
”நொய்யல் நதியைச் சீரழித்ததற்கு உயர் நீதிமன்றம் விதித்த அபராதமே சாய ஆலைகளிடையே ஒற்றுமை குலையக் காரணமானது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று சாய ஆலைகள் தங்கள் மீதான நிர்பந்தத்தை அதிகரித்துக் கொண்டுவிட்டன. இதில், பிரச்னையில் தலையிடாமல் வேடிக்கை பார்த்த அரசுக்கும் பொறுப்புண்டு” என்றும் அவர் சொன்னார்.



தொழிற்துறையினரின் எதிர்காலக் கவலை
இந்நிலையில், சாய ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சாமியப்பன், ”சாய ஆலைகள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் வேலை இழப்பர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டால், பிறகு நிலைமை சீரடைந்த பிறகும் தொழில் சீரடைவது சிரமமாகிவிடும்” என்று எச்சரிக்கிறார். இதனை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சாய ஆலைகள் மீதான தடையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது (ஜன. 31 ) நிலைமையை மேலும் தீவிரமாக்கியது.
சாயஆலை உரிமையாளர் சங்கம் இப்போது நிதர்சன நிலையை உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ”சாயக் கழிவு நீரை ஜீரோ டிஸ்சார்ஜ் செய்வதிலுள்ள தொழில்நுட்பப் பிரச்னைகளை சரிசெய்ய கூடுதலாக 9 மாத அவகாசம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மீதான விசாரணை விரைவில் துவங்கும் என்றும், அதில், தங்கள் பிரச்னைக்கு தற்காலிகத் தீர்வு (சாய ஆலைகள் திறக்க உத்தரவு) கிடைக்கும் என்று நம்புவதாகவும் சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் கவலை தெரிவித்திருக்கிறார். ”சாயத் தொழில் என்பது பின்னலாடைத் துறையின் முதுகெலும்பு போன்றது. திடீரென சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ஏற்றுமதி ஆடை உற்பத்தியும் முடங்கும். ஈரோடு, பவானி, பெருந்துறை பகுதிகளுக்கு கொண்டுசென்று சாயமிடுவது எளிதானதல்ல. தற்போதைய பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக திருப்பூர் தொழில் அமைப்புகளும் கூட்டுக் குழுவைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பூரில் செயல்படும் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) தலைவர் ‘வைகிங்’ ஈஸ்வரன் கூறுகையில், ”சாய, சலவை ஆலைகளின் மூடலால் உள்நாட்டுக்கான பின்னலாடைகளும் ஏற்றுமதிக்கான பின்னலாடைகளும் உற்பத்தியாவது பெருமளவில் குறையும். இந்த ஆண்டு வர்த்தகத்தில் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. தற்போதைய சிக்கல் தொடர்பாக சாய ஆலை சங்கத்துடன் ஆலோசனை நடத்தி கூட்டுக் குழு மூலமாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு போட்டியாகக் கருத்தப்படும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்- உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் (டீமா) செல்வரத்தினம் கூறுகையில், ”சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்னை தலையாய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், பல்லாயிரக் கணக்கான உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, ஜவுளித்தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தும் லட்சக் கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண்பதில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், இத்தனை நாள் கட்டிக் காத்து வந்த ஜவுளித்தொழில் பின்னடைவை சந்திக்கும். ஆகவே, பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து சாய ஆலை சங்கங்கள் உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய ஆலைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பனியன் தொழில் துறையே பாதிக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம்
சாய ஆலைகள் மூடலால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தி இதுவரை இரண்டு நாட்கள் திருப்பூரில் பொதுவேலைநிறுத்தம் நடத்தப்பட்டுள்ளது. இப்பிரச்னை துவங்கியவுடனேயே, இதன் அபாயத்தை உணர்ந்த இந்து முன்னணி அமைப்பு உடனடியாக பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று திருப்பூர் நகரம் முழுவதும் பிப். 4 ம தேதி முழு கடையடைப்பு, வேலைநிறுத்தம் நடந்தது. திரையரங்குகள் கூட செயல்படவில்லை. இந்து முன்னணியின் ‘பந்த்’ அழைப்புக்கு அனைத்துத் தொழிலகங்களும் செவிசாய்த்தன.
தங்கள் வேலை நிறுத்தம் வெற்றி அடைந்திருப்பது பிரச்னையின் அதிதீவிரத்தை அரசுக்கு உணர்த்தி உள்ளது என்கிறார், இந்து முன்னணியின் மாநில பொது செயலாளர் ‘காடேஸ்வரா’ சுப்பிரமணியம். அவர் மேலும் கூறியது:
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சாய, சலவை ஆலைகள் மூடப்படுவதால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பனியன் தொழில் சார்ந்த அனைத்து தொழில்களும் முடங்குவதால், திருப்பூரிலுள்ள 4 லட்சம் வெளிமாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறி ஆகும். சாய ஆலைகளை மூடிவிட்டால் திருப்பூரில் எதுவும் மிஞ்சாது. கடந்த 65 ஆண்டுகளில் சொந்த முயற்சிகளில் பலரும் போராடி திருப்பூரை பனியன் தொழில் நகரமாக ஆக்கியுள்ளனர். இத்தொழிலைக் காக்கும் கடமை அரசுக்கு உண்டு.
நீதிமன்றத்தில் அரசு உத்தரவாதம் அளித்து திருப்பூர் தொழில் துறையினருக்கு கூடுதல் அவகாசம் பெற்றுத் தர வேண்டும். சாயக் கழிவுநீரை குழாய் மூலமாக கடலில் சேர்க்கும் திட்டத்தை ஆய்வு செய்து விரைவில் நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்னையில் அரசு ஓடி ஒளியக் கூடாது என்றார். இதனை வலியுறுத்தி கடந்த பிப்.15-இல் திருப்பூர் மாநகராட்சி முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தையும் இந்து முன்னணி நடத்தி இருக்கிறது.
இதேபோல, திருப்பூர் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பிலும் பொது வேலைநிறுத்தம் பிப்.22-ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, எம்.எல்.எப், ஏ.டி.பி, ஐ.என்.டி.யூ.சி, தொழிற்சங்கங்கள் இதற்கான அழைப்பை விடுத்தன. பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்), தேசிய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
இந்த இரண்டாவது வேலைநிறுத்தமும் முழுமையாக நடந்தது. ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மெத்தனப் போக்கைக் கண்டிப்பதாகவும், அரசு இதில் தலையிட்டு விரைவான தீர்வு காண வலியுறுத்துவதாகவும்’ தொழிற்சங்கக் கூட்டமைப்பு கூறியது. இதில் தி.மு.க. சார்புள்ள தொழிற்சங்கம் மட்டுமே பங்கேற்கவில்லை.



அரசியலாகும் தொழில் விவகாரம்
“இப்பிரச்சினைக்கு தற்போதைய தி.மு.க. அரசின் தொலைநோக்கற்ற தன்மையே காரணம்,” என்கிறார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சிவசாமி. ஜெயலலிதா அறிவித்த- “கடலுக்கு சாயக் கழிவுநீரைக் கொண்டுசெல்லும் திட்டத்தை அமலாக்காததே தற்போதைய பிரச்சினைக்குக் காரணம்” என்பது இவரது குற்றச்சாட்டு.
திருப்பூர் மாநகர மேயரான செல்வராஜோ (தி.மு.க), ”உண்மையில் சாய ஆலைகள் சுத்திகரிப்பு நிலையங்கள் நடத்த பல கோடி நிதி உதவியையும் மானியத்தையும் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெற்றுத் தந்தவர்கள் நாங்கள். இப்போதுகூட, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதிமாறன் கடலுக்குச் சாயக் கழிவுநீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து தீவிர முயற்சி எடுத்து வருகிறார்” என்கிறார்.
திருப்பூர் மாவட்ட அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதன், ”உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அரசு கீழ்ப்படிந்தாக வேண்டியுள்ளது. எனினும் நீதி மன்றத்தில் சாய ஆலைகள் மனு செய்தால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது” என்றார். அதன்படி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி (இவர் அண்மையில் தி.மு.கவுக்குத் தாவிய மார்க்சிஸ்ட்) கூறுகையில், சாய ஆலைகளுக்கு மாநில அரசு அளித்த உதவிகளைப் பட்டியலிடுகிறார். “சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாங்கிய கடனுக்கான ரூ. 100 கோடி வட்டியை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. மாநில அரசும் இதற்கென ரூ.120 கோடி நிதி உதவியுள்ளது..” என்று அவர் பட்டியலைத் தொடர்கிறார்.
கோவை தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினரான சுப்பராயனோ (இந்திய கம்யூனிஸ்ட்), ”அரசு அளித்த உதவிகள் போதுமானவை அல்ல. தற்போதைய தொழில்துறையின் தேவையை உணர்ந்து, கடலில் கழிவுநீரைக் கலக்கும் திட்டத்தை நிறைவேற்றுவதும், அதனை நீதிமன்றத்தில் கூறி தொழில் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்வதுமே உடனடியாக அவசியம்” என்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ‘பாயின்ட்’ மணி, ”குஜராத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ளது போல, சாயக் கழிவுநீரை கடலுக்குள் கொண்டு சேர்க்கும் திட்டமே தொழில்துறையைக் காக்கும்” என்று கூறி இருக்கிறார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி இருக்கிறது தே.மு.தி.க. அதில் பேசிய அதன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், அரசின் செயலற்ற தன்மையைச் சாடினார். கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் சாயக் கழிவை கடலில் சேர்க்கும் திட்டத்தை நிறைவேற்றுவதே தீர்வு என்று கோரி வருகிறது.
அண்மையில் திருப்பூர் வந்த இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், ”திருப்பூர் தொழில்துறை நலிவுக்கு மாநில அரசே பொறுப்பு. ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல், பிரச்சினை முற்றி வெடிக்கும் வரை வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது அரசு தனக்கு சம்பந்தம் இல்லாதது போல ஒதுங்கப் பார்க்கிறது. குஜராத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்போது தமிழகத்தில் ஏன் முடியாது? அரசு வேண்டுமென்றே பிரச்சினையைத் தட்டிக் கழிக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறாக, திருப்பூர் சாய ஆலைகள் மூடல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு, பிரச்னையைத் தீர்க்காமல் நீடிக்கச் செய்வதில் ஒவ்வொருவரும் முனைந்திருக்கின்றனர். திருப்பூரின் வாழ்வாதாரம் இதில் பிணைந்திருப்பதால், ஒவ்வொரு கட்சியும் இதில் தலையிட்டு ஆதாயம் பெறவே முயற்சிக்கின்றன. இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் கூறியது போல, அரசு தான் இதில் பொறுப்பேற்க வேண்டும். தற்போதைய நிலையில் இதைத் தவிர வேறு வழியில்லை.

எந்நேரமும் சிக்கல் முற்றலாம்…
தற்போது சாய ஆலைகள் மூடலுக்குப் பின் பல தரப்பிலும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. தொழில்துறையினர் விரக்தியில் ஆழ்ந்துள்ளது அவர்களது செயலற்ற தன்மையில் வெளிப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்வது கண்டிப்பாக திருப்பூருக்கு நல்லதல்ல. இப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
  • பலரும் கூறுவது போல, கடலுக்கு சாயக் கழிவுநீரை குழாய் மூலம் கொண்டு செல்வது முடிவான தீர்வாகத் தோன்றுகிறது. அதற்கு முன், சாயக் கழிவு நீரை முடிந்தவரை சுத்திகரித்து சாயமும் ரசாயனமும் நீக்கி அனுப்பலாம். இதில் வெளியாகும் வீழ்படிவை மறுசுழற்சிக்கு அனுப்பலாம். இது தொடர்பாக குஜராத் மாநில அனுபவத்தை நேரில் சென்று அறிந்து வரலாம்.
  • அதுவரை, தற்காலிகமாக, 2,200 பிபிஎம் அளவுள்ள கழிவுநீரை வெளியேற்ற அனுமதி பெறலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் முழுமையான சுத்திகரிப்புக்கு அரசே உத்தரவாதம் அளித்து, தொழில்துறை இயங்கச் செய்யலாம். இனிமேலேனும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை கண்டிப்புடன் ஊழலின்றி செயல்பட வேண்டும்.
  • ஆனால், சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பை சாய, சலவை ஆலைகளிடம் ஒப்படைக்கக் கூடாது. அதனை அரசே ஏற்க வேண்டும். அதற்கான செலவை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிடம் லிட்டருக்கு எத்தனை காசு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கலாம்.
  • பொது சுத்திகரிப்பு நிலையங்களை அதிகமாக நிறுவி நொய்யலில் பாயும் சாக்கடை கலந்த கழிவு நீரையும் சுத்திகரித்தால் விவசாயத்திற்கு தண்ணீரும் கிடைக்கும். கடல்நீரையே குடிநீராக்க முடியும்போது, நொய்யலை புனருத்தாரணம் செய்ய முடியாதா என்ன?
  • சென்னையில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ஆயிரம் கோடியில் திட்டம் தீட்டிய அரசு நொய்யல் நதியிலும் இதே போன்ற திட்டத்தை நிறைவேற்றலாம். பிறகு படிப்படியாக, மாசடைந்துள்ள அனைத்து நதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்தலாம்.

14specதொழில்துறை வளம், இயற்கை நலம் இரண்டுமே நமது இரு கண்கள். ஒரு கண் பாதிக்கப்பட்டாலும் சமுதாயம் நலியும். எனவே, நமக்கு கிடைத்துள்ள துயரமான அனுபவத்தைக் கொண்டு, பெற்றுள்ள படிப்பினைகளின் அடிப்படையில், அரசியல் கண்ணோட்டமில்லாமல், அனைவரும் செயல்பட வேண்டிய நேரம் இது. அரசும் அரசியல் கட்சிகளும் தொழில் துறையினரும், விவசாயப் பிரதிநிதிகளும், நீதி துறையும், இணைந்து நடைபோட வேண்டிய தருணம் இது.
நமது எதிர்காலம் மட்டும்மல்ல, நமது சந்ததியினரின் எதிர்காலமும் இதில் அடங்கியுள்ளது என்பதை மனசாட்சியுடன் எண்ணிப் பார்த்து செயல்பட்டால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும். ஆக்கப்பூர்வமாக நல்லதை சிந்திப்போம். நல்லது நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.
முற்றும்.

No comments:

Post a Comment