tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday 18 January 2012

வணிகவரித் துறையை கணினிமயமாக்க ரூ.230 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவு


வணிகவரித் துறையை கணினிமயமாக்க, 230.96 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், வரி ஏய்ப்பு தடுக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செய்திக் குறிப்பு: மாநிலத்தின் மொத்த வருவாயில், மூன்றில் இரண்டு பங்கை, வணிகவரித் துறை ஈட்டித் தருகிறது. இங்கு, அடிப்படைப் பணிகள் மட்டுமே, கணினி மயமாக்கப்பட்டுள்ளன. தற்போது, பெருகி வரும் வணிக பரிமாற்றங்களுக்கு ஏற்ப, துறையின் செயலாக்கத் திறனை அதிகரிக்க, அனைத்து பணிகளையும் கணினி மயமாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி செலுத்துவோர், தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக, அனைத்து நாட்களிலும், 24 மணி நேரம் செயல்படக் கூடிய உதவி மையம் அமைக்கப்படும். இதனால், வணிகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பு, வெகுவாக குறைவதுடன்; துல்லியமான தகவல் பெறப்பட்டு, வரிவசூல் அதிகரிப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுக்க உரிய நடவடிக்கைகளை, துரிதமாக எடுக்கவும் இயலும். இத்திட்டத்தை, 230.96 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில், 93.40 கோடி ரூபாய், மூலதன செலவாகவும், மீதமுள்ள தொகை, ஐந்து ஆண்டுகளுக்குள் தொடர் செலவினமாகவும் மேற்கொள்ளப்படும். இந்த முன்னோடித் திட்டத்தை, 14 மாதத்துக்குள் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment